Storytamil

ஷங்கர்

ஷங்கருக்கு படபடப்பு அதிகமானது, உடல் வியர்த்து, சட்டை நனைய தொடங்கியது. அடடா இப்படி செய்து விட்டோமே என்ற நினைப்பு வந்து வந்து சென்றது. தரையில் ரத்தம் படற தொடங்கி, இவன் காலருகே நின்று, இவனை தொடலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தது. மிக அருகாமையில் சாந்தி அசைவற்று கிடந்தாள், இவன் கிரைண்டர் கல்லை தூக்கி மண்டையில் அடித்த இடம், சகதியாக இருந்தது. இது சாந்தி தானா என்ற சந்தேகம் இவனுக்கே வந்தது. சந்தேகமேயில்லை அவளே தான், எப்பொழுதும் ஒரு நக்கல் சிரிப்புடன் இவனை மதிக்காமல் பார்த்த, அந்த கண்களை இப்பொழுது தேடினான் .  விட்டெறிந்த கிரைண்டர் கல் மூன்று  அடி தள்ளி தரையைப் பிளந்து கிடந்தது. கொலை செய்து விட்டோமே , இனி என்ன செய்வது என்ற கவலையை மீறி ஒரு நிம்மதி கிடைத்தது. ஆறு ஆண்டுகளுக்கு பின்னால் அவன் முகத்தில் புன்னகை.

அடுத்து ஆக வேண்டியதை கவனிக்க வேண்டும், பல படங்களில் பார்த்திருந்தாலும் அவனுக்கு அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. கிச்சனில் இருந்து வெளியேறி , பாத்ரூமிற்கு நுழைந்தான். முகத்தை கழுவி விட்டு , உடை மாறினான். ஒரு சிகரெட்டை பற்ற வைத்து , ஐந்து இழுப்புகள் இழுத்து, அணைத்தான். நாளை காலை வரை வேலைக்கார அம்மா வர மாட்டாள், அதனால் நிதானமாக செயல்படுவது என்று முடிவு எடுத்தான். முதல் கட்டமாக சமையல் அறையில் தெறித்த ரத்த துளிகளை பேப்பரால் துடைத்து ஒரு பிளாஸ்டிக் கவரில் சேமித்தான். சுத்தம் செய்கையில், சாந்தியின் கால் இடறியது, ஓங்கி ஒரு மிதி விட்டான், சாவு என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

இரு வாரங்களுக்கு முன்னர் வரை , தனக்கு வேலை இல்லாத காரணத்தால் மட்டுமே  , சாந்தி தன்னை அவமானப்படுத்துவதாக எண்ணிக் கொண்டிருந்தான். வேலை பறிபோனதிற்கு அவன் காரணமே இல்லை, தேடிக்கொண்டு தான் இருக்கிறான், ஆறு மாதங்கள் வேலை இல்லாமல் இருந்தால் தான் என்ன? இதை ஒரு காரணம் காட்டி சாந்தி , இவ்வளவு அவமானப்படுத்த தேவையே இல்லை. ஆமாம் , குழந்தை இல்லை தான்,  காதல் கல்யாணம் இல்லை தான் , இவனுக்கு சராசரிக்கும் கீழ் ஆன் அணுக்கள் இருந்தாலும், மருத்துவர் பரிந்துரையின் பேரில், நாளைக்கு மூன்று வேளையும் மருந்துகள் உண்டான், அதே நேரம், இந்த சனியன் பிடித்த சிகரெட்டையும் விட முடியவில்லை. ஆனால் இக்காரணங்கள் அனைத்தும் பொய் என்பதை நேரிலேயே கண்டான். வாழ்கை வெறுத்தான்.  

வேலையில்லா கணவர்களின் தலையில் அணைத்து வீட்டு வேலைகளும் விழும், ஆனாலும் இவனிடம் சம்பாதித்த பணம் இருந்ததால், வேலைக்காரியை வைத்து சமாளித்து வந்தான். இவனின் ஒரே வேலை , அவளுக்கு காலை மாலை டிரைவர் ஆக இருப்பது தான். அன்றும் அதே  போல் அவளை கூட்டி வர அலுவலகம்   சென்றான்,  அரை மணி நேர காத்திருப்பு. மூணு சிகரெட் , ஆறு போன் கால்களுக்கு  பின்னரும் அவளை காணாததால் , செக்யூரிட்டி பக்கம் சென்று விசாரித்தான். அவள் மதியமே , கூட வேலை பார்க்கும் குணா என்பவருடன் சென்றுவிட்டாள் என தகவல் அறிந்தான். மனம் எங்கேயோ சென்றது, காரணம், ஆறு ஆண்டுகளாக அவள் கர்பமாகவில்லை. அப்படி இருக்காது என்று நம்பி, காரில் கிளம்பினான்.  சிகரட்டை துழாவினான், பாக்கெட் காலி.  போகும் வழியில் ஒரு கடையில் நிறுத்தி வாங்கி ஒரு இழுப்பு இழுக்கும் போது , அன்னபூரணி லாட்ஜ்ல் இருந்து வந்த சாந்தியை கண்டான். அவளருகே கருப்பாக, அரை கிராப் வெட்டி, அவள் கூடவே கை கோர்த்து குணா வந்தான்.  இவன் மறைந்து அவர்களை கவனித்தான். பல ஆண்டுகள் காதலித்தவர்கள் போல , உலகத்தை பற்றிய எந்த கவலையும் இல்லாமல் எதிர் திசையில் நடந்து சென்றனர். அன்றிலிருந்து வீட்டில் ஒரே சண்டை . அது இன்று , “நீ எல்லாம் மொதல்ல ஒரு ஆம்பளைனு நிரூபிச்சுட்டு கேள்வி கேளு” என்ற இடத்தில் முடிவு பெற்றது. வந்த கோவத்திற்கு எதை எடுத்து அடிப்பது என்று தெரியாமல் சங்கர், கனமாக இருந்தாலும் பரவாயில்லை என்று கல்லை தூக்கி மண்டையில் ஒரு போடு போட்டான் , ரத்தம் தெறித்து அவள் கீழே சரிய, இவன் கல்லை விட்டெறிந்தான். தவறு செய்து விட்டோம், கத்தியால் குத்தி இருந்தால், இவ்வளவு வேலை இல்லை என்று நொந்து கொண்டான்.

அவள் சடலம் இருந்த சமையல் அறையிலிருந்து வெளியே வந்தான். போனை எடுத்தான், யாரிடமோ பேசினான் , பேச்சில் ஒரு தெளிவு தென்பட்டது.

அடுத்த நாள் காவல் நிலையத்தில் சரண் அடைந்தான். தன்னை ஒரு ஆண் மகனாக கற்பனை பண்ணிக் கொண்டான்.


Hi, I’m valaithinni

Leave a Reply