வண்டிப்பாளையத்தில் புழுதி பறக்க வந்து நின்றது அந்த பச்சை நிற பேருந்து. வந்து நிற்கும் முன்பே வாலிபர்கள் சர சரவென குதித்து ஓட , வயோதிகர்கள் ,மற்றும் ஓடும் வண்டியில் இருந்து இறங்க தெரியாத அப்பாவிகள், படிகளை நோக்கி படை எடுத்தனர். வாலிபர்கள் குதித்த அதே நேரத்தில், கிழே நிற்கும் கூட்டம் பேருந்தின் உள்  நுழைய ஆயத்தமானது. வேட்டியை இழுத்துக்கொண்டு ஒரு பெருசு இறங்கியதும் ஒரு வாலிபர் அவரை உரசிக்கொண்டு உள்நுழைய பார்க்க, பெருசு முணுமுணுக்க, “யோவ் பெருசு சீக்கிரமா போயா ” என்று பின் நின்ற முறுக்கு மீசை அதட்ட   என அந்த இடமே ஒரு களேபரம் ஆகிக்கொண்டிருந்தது. இது எதுவும் அறியாமல் சோலையப்பன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான், அவனது பயணம் அவ்வளவு அயற்சியானது .  அவனது பல மணி நேர பயணத்தின் கடைசி இலக்கு இந்த நிறுத்தம், ஆனாலும் ஜன்னல் ஓரமும் , வீசி வரும் ஒரு மெல்லிய காற்றும் , அரை மணி நேரம் முன் உண்ட சோறும் அவனுக்கு துக்கத்தை வரவழைத்தன. மதிய சோற்றுக்குக் பின் வரும் துக்கம் அலாதியானது. 

ஒரு வழியாக அனைவரும் ஏறும் வழியில் இறங்கி, இறங்கும் வழியில் ஏறி, வாலிபர்கள் படியில் தொங்க , நடத்துனர் விசிலை ஊத , வண்டி நகர , சோலை முழித்தான். . தான் இறங்க வேண்டிய இடம் பின்னல் செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தான் . எழுந்து நின்று நடத்துனரிடம் மன்றாடினான் . எரிச்சலுடன் வண்டியின் வேகத்தை குறைத்த ஓட்டுநர் திரும்பி பார்க்க, நடத்துனர் “இன்னும் யாராவது எறங்கணுமா” என்று நக்கலாக கேட்க, அனைவரும் சோலையை திரும்பி பார்த்தனர். சோலை இந்த ரணமான கணத்தில் இருந்து தப்புவதற்காக வண்டியின் பின் படியில் இருந்து குதித்தான். குதித்ததில் கல் ஒன்று செருப்பையும் மீறி குத்தியது . 

வேறு யாராவது இருந்திருந்தால் , ஐயோ அம்மா , அல்லது ஒரு ஷ்ஹ் சப்தமாவது வந்திருக்கும். 30 ஆண்டு கால் செருப்பில்லா கால்களுக்கு அந்த வலி தெரியவில்லை. செருப்பு பிய்ந்து இருக்குமோ என்ற கவலை வந்தது சோலைக்கு. சாலைக்கு ஓரத்தில் இருந்த மரம் வரை நடந்து சென்று , செருப்பை கழட்டி பார்த்தான். கருங்கல் ககுத்தியதில்  குதி கால் படும் இடத்தில் ஒரு ஓட்டை.  சோலைக்கு கவலை  அதிகமானது, செருப்பின் வாரு  பிய்யவில்லை , இப்படியே ஒரு ஆறு மாதம் ஓட்டிவிடலாம் , அல்லது செருப்பில்லாமல் சுத்தலாம். வேண்டாம், இவனை செருப்பில்லாமல் பார்த்தால் அவனது பையனுக்கு கோவம் வந்து விடும். ஓட்டை செருப்போடு சுற்றி திரிந்தால் , மழை காலம் வரை ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால் மழை காலத்தில் ஓட்டை வழியாக தண்ணீர் புகுந்து, குழகுழப்பை கொடுத்து ஒரு மாதிரி ஆகிவிடும். புது செருப்பு விலை அதிகம் என்பதால், அதை பற்றி அவன் நினைக்கவே இல்லை.  இவ்வாறு பல வித எண்ணங்கள் அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. முடிவாக ஒரு முடிவுக்கு வந்தான். ஆம் , செருப்பை சரி செய்து விடுவது என்பது தான் அந்த முடிவு. கழட்டிய செருப்பை மாட்டி , பஸ் ஸ்டாண்ட் இருக்கும் வழியை  பார்த்தான். ஒரு 200 அடி இருக்கும் , எப்படியும் ஒரு செருப்பு தேய்ப்பவன் இல்லாமலா போய்விடுவான் என்ற நம்பிக்கையில் நகர்ந்தான். 

 செருப்பு தேய்ப்பவன் எங்கே என்று கண்களால் மேய துடங்கினான். ஒரு 50 ஆதி தூரத்தில் ஒரு மரம் , அதன் கீழே சின்னதாக ஒரு தரை கடை தென்பட்டது. அருகே சென்று பார்த்தல், செருப்பு கடைக்கான அத்தனை அடையாளங்களும் இருந்தன. சிதறி கிடந்த ரப்பர் துண்டுகள், ஒரு பையில் ஜவ்வு , நூல் கண்டு மற்றும் தைக்கும் ஊசி. முக்கியமாக , கடைக்கு பெயரோ , இல்லை பலகையோ இல்லை. செருப்பு தைப்பவன் மதிய உணவுக்கு சென்றிருப்பான் போல. சரி வரட்டும், செருப்பை தைத்து விட்டே செல்லலாம் என தீர்மானித்தான் . ஐந்து நிமிடதிதில், பகட்டாக உடை அணிந்து ஒரு வாலிபன்  வந்தான்., வண்டியை நிறுத்திவிட்டு இவனை பார்த்தான் . 

“செருப்பு தைக்கணும்  , எவ்வளவு ஆகும்” என்று இவனிடம் கேட்டான் . 

“ஆள் , இல்லைங்க ” என்று சோலை பதில் கூறியபடியே , அந்த வாலிபனை  நோட்டம் விட்டான். நல்ல வசதியான விட்டு பிள்ளை என்று தெரிந்தது. வெள்ளை நிறத்தில், பளீரென ஒரு சட்டை, கீழே புளு கலரில் ஒரு பேண்ட். நல்ல திடகாத்திரமான பேண்ட் அது, அதற்க்கு கீழ் ஒரு நல்ல செருப்பு . நல்ல செருப்பை வைத்துக்கொண்டு இந்த கடையில் என்ன வேலை என்று நினைக்கும் பொழுது, அதை இடைமறித்தான் அந்த வாலிபன். “எப்போ வருவான்? ” என்று அந்த வாலிபன்  கேட்க . “தெரியலைங்க” என்று அவன் சொல்ல ஆரம்பிக்கும் பொழுதே செருப்பு தைப்பவன் வந்தான். 

சோலை பேசத்தொடங்கும் முன்னரே , ” இந்த,இத சீக்கிரமா தைச்சு கொடு” எண்டு ஒரு பையை அவனிடம் வீசினான் பகட்டு தம்பி. 

செருப்பு தைப்பவனுக்கு ஒரு நொடி கோவம் வந்தது, அனால் அதை காட்டிக்கொள்ளாமல் , சரி என்பதை போல தலையை ஆட்டி, “த்து” என வெற்றிலை எச்சிலை உமிழ்ந்தான். 

அப்பொழுது தான் அவன் சோலையை பார்த்தான்.

Hi, I’m valaithinni

Leave a Reply