Storytamilதமிழ்

ஐ பி சி – 354 – பாகம் – ஒன்று

இருக்கும் தெம்பை வைத்து ஒரு அரை விட்டான் முகிலன். வாயின் ஓரம் வழிந்து வரும் குருதியை தடவிப்பார்த்தபடியே ,  முகிலனை முறைத்தான், அடிவாங்கிய சுப்பு. 

மறுபடியும் ஒரு அரை. 

இந்த முறை காதின் அருகில் விழுந்தது.  அதிலும் குருதி வந்திருக்குமா  என்று யோசித்தான் சுப்பு. மறுபடியும்  முறைத்தால் எந்த பக்கம் அடி விழும் என்ற அரை நொடி யோசனையை புறம் தள்ளினான் . அடி வாங்குவது சுப்புவிற்கு புதிதல்ல. ஆனாலும் இவனெல்லாம்  அடிக்கிறானே என்பது வலித்தது . ஆனாலும் காரியம் தான் முக்கியம் என்று ஆசுவாசப்படுத்திக்கொண்டான். 

இதுவரை மூன்று அரை வாங்கியிருந்தான் சுப்பு. கன்னத்தை தடவியபடியே அடுத்து என்ன, என்று யோசித்தான் . ஒன்று வன்கொடுமை சட்டத்தில் இவனை உள்ளே தள்ள வேண்டும் . இல்லையேல் முகிலன் கோபம் தலைக்கேறி இவனை கொல்ல வேண்டும் . இதை தாண்டி யாரேனும் மன்னித்து வீட்டுக்கு கூட அனுப்பலாம் . தப்பி தவறி கூட அப்படி ஒன்று நிகழ்ந்து விட கூடாது என்று உறுதி பூண்டான்.

இந்த சிந்தனைகளை இடைமரித்தது முகிலனின் செல்போன் சிணுங்கல். இவனது மனைவி சரிகாவாக தான் இருக்க வேண்டும் .  அவளேதான், அரை நொடி காதில் பேசிவிட்டு,  மீதியை ஸ்பீக்கரில் போட்டான் முகிலன் . 

“அவன ரெண்டு தட்டு தட்டிட்டு வீட்டுக்கு அனுப்பி வச்சுடுநே” என்று சரிகா அவனது அண்ணனிடம் சொல்ல , வெறும் உம் என்று முடித்தான் . 

செல்போனை அனைத்து “நீ என்ன பெரிய ரவுடியாடா” என்று கேனைதனமான கேள்வி ஒன்றை வீசினான் முகிலன். அதோடு ஒரு அரை விட்டான் . காதில் ரீங்காரம் அடிக்க ஆரமபித்தது. 

அடித்த முகிலனுக்கே தெரியும் சுப்பு ஒரு டம்மி பீஸ் என்பது . இருந்தாலும் அவனுக்கு தங்கை என்றால் உயிர்.அவளை அடித்தவன் மாப்பிள்ளையாக இருந்தால் என்னஎந்த மயிராக இருந்தால் என்னவந்த கோபத்திற்கு இன்னொரு குத்து விட்டான் . 

குத்து வாங்கிய சுப்புவிர்க்கும்  இந்த அண்ணன் தங்கை பாசம் தெரியும்.  இருந்தாலும் அடக்க முடியாமலேயே சரிகா கன்னத்தில் பளாரென்று ஒன்று விட்டிருந்தான். சரிகா கன்னத்தை பிடித்தபடியே அவளது அறைக்கு ஓடினாள் . அங்கிருந்தே அண்ணனுக்கு தகவல் அனுப்பினாள். கால் மணிநேரத்தில் காக்கி ஆடையுடன் வந்தான் முகிலன் . சுப்புவின் சட்டையை பிடித்து போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தான் . அரை மணிநேரமாக வெளுத்துக்கொண்டிருந்தான். 

இன்ஸ்பெக்டர் வந்து முகிலனை தனியாக அழைத்து என்னவென்று விசாரித்தார். அடடா இந்த ஆள் பாட்டுக்கு சமாதானம் பேசி விட்டுக்கு அனுப்பி விடுவாரோ என்று சுப்பு பயந்தான் . அவர் காதுபடவே “ஆமாம் இவரு பெரிய வென்ன , அப்படியே கிழிச்சுருவ பாரு” என்று நக்கலாக சிரித்தான் . அவர் லத்தியை கொண்டு அடித்த  அடியில் , கால் மரத்து போனது. பரவாயில்லை , விட்டிற்கு போவதற்கு இதுவே மேல் என்று சுப்பு முடிவு செய்தான் .

திடீரென வந்த முகிலன் , சுப்புவை எழுப்பி , வா போகலாம் என்றான். தான் இவ்வளவு நேரம் செய்தது எதுவுமே வேளை செய்யவில்லையா என கொதித்தான். அந்த காவல் நிலையத்தின் அறையிலிருந்து சுப்புவை கை தாங்களாக வெளியே கூட்டி வந்தான் முகிலன். சுப்பு சட்டென்று ஒரு முடிவு எடுத்தான் . வாயில் இருந்த இரத்தம் , எச்சை அனைத்தையும் சேகரித்து , இன்ஸ்பெக்டரின் முகத்தில் துப்பினான் . அவரின் தாயை பற்றி இரு வார்த்தைகளையும் சேர்த்து துப்பினான் . அது வேலை செய்தது.  கோபம் கொப்பளிக்க அவர் எழுந்தார். காவல் நிலையம் பரபரப்பானது . வெளுத்து எடுத்து விட்டார்கள் . “சார் என் மச்சான் சார்” என்று முகிலன் எவ்வளவோ கெஞ்சியும் கேட்கவில்லை. ஒரு வாரம் வைத்து ஊமை குத்து குத்தி நீதி மன்றத்தில் சமர்பித்தார்கள். 

ஐ பி சி – 354 என்ற பிரிவின் கீழ் மனைவியை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சுப்புவின் அப்பாவியான முகம் பார்த்து, நீதிபதி கரிசனமுற்றார். “பார்த்தா , நல்ல படிச்சுருக்க; நல்ல வேலைல இருக்க, அப்புறம் ஏன் பா பொண்டாட்டிய  அடிச்ச ” என்று கேட்டார். 

தன சோக கதையை ஆரம்பித்தான் சுப்பு….

Hi, I’m valaithinni

Leave a Reply