நாய் கதை

அய்யோ வலி தாங்க முடியலையே என்று மனைவி கதற, அவளை திரும்பி பார்த்தபடியே ஆட்டோவின் வேகத்தை கூட்டினான் கோபி. சதக் என்று ஒரு சத்தம்,  வண்டி அரை நொடி தடுமாறியது . நாய் கத்தும் சத்தம் கேட்டதும், தான் அவசரத்தில் அதன் மேல் வண்டியை ஏற்றி விட்டோம் என்று உணர்ந்தான் . ஒரு நிமிடம் அந்த நாயை பார்த்து விட்டு வரலாமா என்று யோசித்துவிட்டு முன்னேறினான். 

தங்கம்மா பிரசவ வலியில் பின்னால் இருக்க, இவன் எப்படி நிறுத்த முடியும். நாயை பார்த்துக் கொள்ள கூட இந்த  சமூகத்தில் ஆயிரம் பேர் இருப்பார்கள், அவளுக்கு ?. இவனை நம்பி ஓடி வந்த அவளை விடவா அந்த நாய் முக்கியம்? 

இரு நாட்கள் கழித்து தங்கம்மா, மகன் சகிதம் திரும்பி வரும் பொழுது அந்த நாயின் சிந்தனை வர , அங்கே இறங்கினான் . அடிபட்டு ஒதுங்கிய அதே குப்பை தொட்டியில், அந்த தாய் நாய் செத்து கிடந்தது. படு பாவிப்பயல்கள் ஒருவன்  கூட அந்த நாயை காப்பாற்றவில்லை. எத்தனை குட்டிகள் போட்டதோ தெரியவில்லை, ஒன்று மட்டுமே அங்கே கிடந்தது . 

அந்த குட்டியை தூக்கி வந்து மகனுக்கு ராம் என்றும் , குட்டி நாயிற்கு லட்சுமணன் என்றும் பெயர் சூட்டி வளர்த்தான். 

Leave a Reply

Your email address will not be published.